இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பை உடைத்துப் போடும் பல்வேறு முயற்சிகள் கடந்த 100 வருடங்களாக எழுத்து, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் முயற்சிக்கப்பட்டே வருகின்றன. இஸ்லாமை வெறுப்பவர்கள் அதில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை. இருந்தும், அவர்களுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. முற்றிலுமாக சாய்த்து நிலைகுழையச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் (ஷரீயத்) மற்றும் சமூகப் பண்பாடுகளை அறிவியல் கேள்விகளுக்கு உட்படுத்துவதன் மூலம் முஸ்லிம் புதிய தலைமுறையிடம் இஸ்லாம் நீக்கம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.

1987ல் சல்மான் ருஷ்டி என்பவர் சாத்தானின் கவிதைகள் என்ற பெயரில் எழுதிய நூலை இஸ்லாமுக்கு எதிராக ஐரோப்பிய முதலாளித்துவ சமூகம் கொண்டாடியது. அந்த கோபத்தில் தான் ஈரான் நாட்டின் அதிபரும் ஈரான் தேசிய இறைநெறி தலைவராகவுமிருந்த அயத்துல்லாஹ் கொமேனி ஈரான் நாடாளுமன்றத்தில் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை தீர்ப்பெழுதினார். உலகம் கொமேனியை சபித்தது. சல்மான் ருஷ்ட்டி தலைமறைவு வாழ்க்கைக்கு திரும்பினார்.

 

 

 

 

பிரான்சு நாடு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகைகளில் முஹம்மது நபிகளாரை கண்ணியக்குறைவாக எழுதி வந்திருக்கிறது. துருக்கிய கிலாஃபா அரசின் சாசன தலைவர் (கலீஃபா) அப்துல் ஹமீது அவர்கள் பிரான்சு நாட்டு தூதரை அழைத்து கண்டித்திருக்கிறார். இது கடந்த காலச் சம்பவங்கள். சமீபத்திய சில வருடங்கள் முன்பு சார்லி கெப்தோ என்ற பிரான்சு நாட்டு பத்திரிகை முஹம்மது நபிகளார் குறித்து கேலிச்சித்திரம் வரைந்தது. இவ்வாறு முஹம்மது நபிகளார் மற்றும் இஸ்லாமை சீண்டுவதில் மதச்சார்பற்ற அரசுகள் மதச்சாற்பற்ற எழுத்தாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். தமிழகத்தில் தினமலர் போன்ற வலதுசாரிப் பத்திரிகைகளும் கூட முஹம்மது நபிகள் பெயருக்கு களங்கம் கற்பித்து வருகின்றன. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரம் செய்கின்றன.

தற்போது புர்கா, ஃபர்ஹானா மற்றும் தி கேரளா ஸ்டோரி என்ற மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி விவாத சூட்டை கிளரிவிட்டுள்ளன. இதில், கேரளா ஸ்டோரி படம் இந்துத்துவ அரசியல் நோக்கத்துக்காக எடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபர்ஹானா என்ற படம் முஸ்லிம் பெண்களை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டு இருக்கிறது. புர்கா திரைப்படம் முஸ்லிம் பெண்களிடம் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களை கேள்விக்கு உட்படுத்த தூண்டும் நோக்கத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், புர்கா படம் பெரியாரிய சிந்தனை தளத்தில் இருந்து வந்திருப்பது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறது. இறுதியாக பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதை முஸ்லிம்கள் உணரத் தொடங்குகிறார்கள். இந்துத்துவ சக்திகள் மட்டும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் தூண்டும் படங்களை எடுக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு, `நீங்கள் உயிரைவிட உயர்வாக மதிக்கும் இஸ்லாமுக்கே நாங்கள் எதிரிகள் தெரியுமா?’  என்று பெரியாரியவாதிகள் வெளிப்பட்டு இருக்கிறார்கள .

முஸ்லிம்கள் இந்திய சமூகச்சூழலில் இஸ்லாமுக்கு எதிரான இந்துத்துவ எழுச்சியை அடையாளம் கண்ட அளவுக்கு பெரியாரிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி மார்க்சிய அமைப்புகளின் இஸ்லாமுக்கு எதிரான கடும்போக்கை சரியாக உணரவில்லை. முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் உடன் நிற்போம்; நாங்கள் தான் குரல் கொடுப்போம், எங்கள் பிணத்தை தாண்டித்தான் முஸ்லிம்களை தொட முடியும் என்று வீரம் பேசுகிற பெரியாரிய, மார்க்சிய அமைப்புக்கள் முஸ்லிம்களின் இறைநம்பிக்கை மற்றும் இஸ்லாம் நெறிக்கு எதிராக தீட்டியுள்ள கூராயுதங்களை முதுகுக்குப் பின்னே மறைத்துக் கொண்டுள்ளார்கள். இப்போது அந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுக்கின்றார்கள். இஸ்லாமுக்கு எதிரான பெரியாரிய நாத்திகர்களின் பிரச்சாரப் படங்களை கூட இந்துத்துவ முயற்சி என்று பேசக் கூடிய அளவுக்கு தான் முஸ்லிம்களின் அரசியல் புரிதல் இருக்கிறது. முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் சாக்கிரடீஸ் ‘நீயுமா புரூட்டஸ்’ என்று  கேட்டதைப் போன்று கேட்க துணிவில்லாமல் நட்பு குழைவை அஞ்சி மௌனிக்கின்றனர்.

இந்தியாவில் அரசியல், சமூகப் பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்தியப் பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளை தங்களது பிரச்சனைகளாகவே கருதி வருகின்றனர். தங்கள் பிரச்சனைகளை கடந்து இந்து பிற்பட்ட/ தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளுக்கு பிற்பட்ட/ இடதுசாரிய/ பெரியாரிய அமைப்புகள் மற்றும் கட்சிகளோடு இணைந்து போராடி இருக்கிறார்கள். இந்து வலதுசாரிய இயக்கங்களுக்கு இறைநம்பிக்கை, மதநம்பிக்கை இருந்தாலும் அவை இஸ்லாமின் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானவை என்பதால் முஸ்லிம்கள் இந்து வதுசாரிகளுக்கு எதிராகவும் பெரியாரிய/ இடதுசாரி அமைப்புகள் இறைநம்பிக்கை மதநம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும் இஸ்லாம் சொல்லும் சமத்துவம், சமூகநீதிக்கு நெருக்கமாக இருப்பதால் உறவாகவும் இருக்கிறார்கள். அவர்களின் குரலாகவும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். அரசியலிலும் அம்பேத்கர், பெரியார், அண்ணா, வி.பி.சிங், கருணாநிதி, தேவே கவுடா, மூப்பனார், முலாயம்சிங், மாயாவதி, லல்லுப்பிரசாத், ஜெகஜீவன்ராம் என்று பிற்பட்ட வகுப்பு தலைவர்களைத் தான் ஆதரிக்கிறார்கள்.

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் முஸ்லிம்கள் மார்சிஸ்ட் கட்சியை, அடுத்தடுத்து ஆதரித்து வருகிறார்கள். கேரளாவில் முஸ்லிம் வாக்குகளை புறக்கணித்து மார்க்சிஸ்ட் வெற்றிப் பெற முடியாது. ஆனால், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சியான முஸ்லிம் லீக் கட்சியை மதவாத கட்சியாக விமர்சித்து தேர்தல் கூட்டணியில் லீக்கை மார்சிஸ்ட் கட்சியினர் புறக்கணிப்பார்கள். கோவிலை இடித்ததில்லை, இந்துக்களை கொலைகள் செய்ததில்லை, அவதூறு பேசியது இல்லை, வன்முறையை தூண்டியது இல்லை இருந்தும் முஸ்லிம் லீக்கும் பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான் என்பார் மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் எச்சூரி. இவர்களுக்கு மதவாதத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. முஸ்லிம் சமூகம்தான் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்துகிறது. ஆனால், கட்சியை மதவாதம் என்று புறக்கணிப்பதும் முஸ்லிம் மக்கள் சமூகத்திடம் வாக்கு கேட்பதும் மார்க்சிய கமயூனிஸ்ட் கட்சிகளின் அரசியலாக இருக்கிறது.

இந்துத்துவ சக்திகளால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் போது முஸ்லிம்களுக்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் ஆதரவாக நிற்கும் இந்திய மார்க்சிய இடதுசாரிகளும் பெரியாரியவாதிகளும் மறைவாக இஸ்லாமை எதிர்க்க கூடியவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட உயர்ந்ததாக மதிக்கும் இஸ்லாமிய நெறியின் மீது இவர்களுக்கு ஒரு முரணுணர்வு இருந்து வருகிறது. இந்த முரணுணர்வு எந்த விதத்திலும் தவறானது இல்லை. முரண் இருப்பதால் தான் வேறுவேறு சித்தாந்தமாக இருக்கிறோம். ஆனால், இந்தக் கருத்துப் போரை பெரியாரியவாதிகளும்/ மார்க்சியவாதிகளும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். திமுக, அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட கட்சிகள் கொள்கை முரண் பேசாமல் முஸ்லிம்களை வாக்குகளுக்காக வைத்துக் கொள்வதும், பெரியார் மற்றும் மார்க்ஸ் பெயரிலான அமைப்புகள் இஸ்லாம் பற்றி அவதூறு பரப்புவதும் முரணாக இருக்கிறதே. அதாவது தமிழக வெகுஜன மக்கள் இஸ்லாம் பக்கம் திரும்பக் கூடாது என்பது இந்த எதிர்க்கருத்தைப் பரப்புவதின் நோக்கமாக இருக்கிறது.

மே 5 ஆம் நாள் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மாநில உளவுத்துறை எச்சரிக்கையை மீறி தமிகத்தில் திமுக அரசு வெளியிட அனுமதித்தது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பெரியாரிய- திராவிட/ இடதுசாரி அமைப்புகள் கடுமையாக சாடுகிறார்கள். தமிழக அரசை வசவுகிறார்கள். அதேநேரம், தமிழில் தயாரிக்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியான ‘புர்கா’ படம் பற்றி எந்த கருத்தும் பெரியாரிய / மார்க்சிய தளங்களில் இருந்து வரவில்லை. பல இடதுசாரி மற்றும் திராவிட கருத்துச் சிறுத்தைகள் / யூ டியூப் புரட்சியாளர்கள் ‘புர்கா’ மற்றும் ‘பர்ஹானா’ படங்களுக்கான முஸ்லிம்கள் எதிர்ப்பை கண்டுக்காமல் நழுவிக் கொண்டார்கள். காரணம், அந்தப் படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கு அவர்கள் ஆதரவானவர்கள். அதநேரம், அந்த படம் வெளிப்படுத்திய கருத்து குறித்து விவாதிக்கவும் இல்லை. இந்தப் படங்கள் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது. மற்ற மதங்களைப் போல இஸ்லாமும் பெண்களை அடிமை செய்யும் மதம் என்பது இவர்களின் தீர்க்கம்.

முஸ்லிம்களுக்கும் பெரியாரிய/ மார்க்சிய கருத்துகள்/ அமைப்புகள் மீது முரணுணர்வு உண்டு என்றாலும் நட்புணர்வு காரணமாக எதிர்க்கருத்தாட துணியவில்லை. மேலும், சிறுபான்மையாக இருக்கும் நமக்கு ஒரு பிரச்சனை என்றால் இவர்கள் தானே ஆதரவாக இருக்கிறார்கள். இந்துத்துவ மதவாத அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள், நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று முஸ்லிம்கள் பெரியாரிய/ மார்க்சிய அமைப்புகளை மதிக்கிறார்கள். தங்கள் மேடைகளில் பேச அவர்களை அழைக்கிறார்கள். குறிப்பாகவும் சொன்னால் முஸ்லிம்கள் மேடைகளில் திராவிட/ மார்க்சிய மொழிகளில் தான் பேசுகிறார்கள். இரு கொள்கைகளின் தோழர்களையும் உற்ற உறவாக கருதுகிறார்கள். முஸ்லிம்கள் இஸ்லாம் கோட்பாட்டை/ வாழ்வியலை பின்பற்றுவதற்கு உரிய சுதந்திரம், உரிமை குறித்து வாதிடும் வக்கீல்களாக இருக்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்களாகவும், பயணங்களின் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் எவரிடத்திலும் இஸ்லாம் குறித்தான விவாதங்கள் செய்வதில்லை. பொது வெளியில் தான் ஒரு முஸ்லிம் என்பதையோ அல்லது இஸ்லாமின் கடமைகளை தவறாமல் முழுமையாக நிறைவேற்றும் உண்மையான பக்தன் என்பதையோ கூட காட்டிக்கொள்வதில்லை. தங்களை மத உணர்வாளன் என்றோ மதவெறி கொண்டவன் என்றோ புரிந்து கொள்ளக் கூடாது அதன் காரணமாக இவர்களின் நட்பு முறிந்திடக் கூடாது என்று அச்சப்படுகிறார்கள். அதாவது ஒரு பிராமணப் பையனுடன் பழகினால் அவனோடு இருக்கும் சமயம், சைவம் மட்டும் சாப்பிட்டு அவனது மனம் நோகாமல் பழக விரும்புவது போல. மேலும், தன்னை இறுக்கமான முஸ்லிமாக காட்டிக் கொண்டால் அவர்களது குழுக்களில் இருந்து விலக்கி விடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது.

இன்றைய முஸ்லிம் ஆண்-பெண் இளைஞர்கள் இந்துத்துவ அரசியல், பாசிசம், ஜனநாயகம், கம்யூனிசம் போன்ற நூல்களை முஸ்லிம் இளைஞர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். அந்த தளங்களில் இருந்து கருத்துப் பறிமாற்றங்கள் செய்கிறார்கள். அவர்கள் உண்மையில் இஸ்லாம் குறித்து ஒன்றுகூட கற்றுக் கொள்வது இல்லை. இந்த வகை முஸ்லிம் இளைஞர்களை வைத்து இஸ்லாமுக்கு எதிரான கருத்துரையாடல்களை பெரியாரிய / மார்க்சிய சிந்தனையாளர்கள் விவாதிக்கிறார்கள். இது பெரிய அளவில் சத்தமில்லாமல் நடக்கிறது. கேரளாவில் மார்க்சிய விவாதங்களில் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நூற்றுக் கணக்கில் இஸ்லாமில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இவர்கள் தங்களை எக்ஸ் முஸ்லிம் என அடையாளப்படுத்துகின்றனர். அதாவது முன்னாள் முஸ்லிம் இப்போது இறைமறுப்பாளன் என்பது. இவர்கள் அறிவார்ந்த கேள்விகளாக திருக்குர்ஆன், நபிவாக்கு சம்பந்தமாக முரணான, சிக்கலான கேள்விகளை பொது வெளியில் வைத்து இஸ்லாம் பற்றிய பாண்டித்தியம் இல்லாத முஸ்லிம்களை விவாதத்துக்கு அழைக்கிறார்கள். நவீன முதலாளித்துவ சமூக அரசியல் இஸ்லாமுக்கு முற்றிலும் எதிரானது. முலாளித்துவ சமூக அரசியல் சூழலில் தற்கால முஸ்லிம்கள் நெருக்கடிகள் காரணமாக இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களின் படி முழுமையாக வாழ்வதில்லை. இதைக் கொண்டு இஸ்லாமியச் சட்டங்கள் தற்காலத்துக்கு பொருந்ததாது என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்கிறார்கள்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிமைகளாகி விட்ட முஸ்லிம் சமூகம் தங்கள் பிள்ளைகள் படித்து விட்டு உடனடியாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதால் இன்றைய இளைஞர்கள் இஸ்லாமிய வாழ்க்கையை பரம்பரையில் இருந்தும், குடும்ப வழக்கில் இருந்தும்தான் எடுத்துக் கொள்கிறார்கள். இஸ்லாமை ஒரு சித்தாந்தமாக கற்பதில்லை, கற்க வழியில்லை. இஸ்லாம் பெரியாரியம் / மார்க்சியம் என அனைத்து தத்துவங்களையும் வெற்றிக் கொள்ளும் வல்லமை உடையது. அவ்வாறுதான் இறைவன் திருக்குர்ஆனில் சொல்கிறான்.

இஸ்லாமுக்குப் பிறகான காலத்தில் தோன்றிய கோட்பாடுகள் எதுவும் இஸ்லாமை மிஞ்சியது இல்லை என்று முஸ்லிம் இளைஞர்கள் ஒப்பு நோக்குவது இல்லை. இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள், ‘எவன் ஒருவன் மற்ற வகை கோட்பாடுகளையும் கற்றுக் கொள்ளவில்லையோ அவன் இஸ்லாத்தை அழித்து விடுவான்’ என்று எச்சரித்தார்கள். இந்த எக்ஸ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சூழலில் வந்தவர்கள். இவர்கள் முன் வைக்கப்படும் இரண்டு கேள்விகள்: 1) ஏன் இஸ்லாம் பெண்ணை முக்காடு போட்டு மூடி வைக்கிறது? 2) 1400 வருடங்கள் பழமையான சட்டங்களை ஏன் பின்பற்ற வேண்டும்? அறிவியல் வளர்ச்சி மதங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அறிவியலில் அனைத்துக்கும் தீர்வு உள்ளது. மதங்கள் அறிவியலுக்கு முரணானது என்ற கருத்தை படித்த முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பெரியாரிய/ மார்க்சிய அமைப்பினர் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். முஸ்லிம்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்றார்கள். கடந்த கால் நூற்றாண்டாக முஸ்லிம் பெண்களே 100% படிக்கிறார்கள். பள்ளிக் கல்வியை கடந்து ஆய்வு மாணவர்களாக உயர்ந்து வருகிறார்கள். பிள்ளைகளை படிக்க அனுப்பினால் அவர்கள் சத்தமில்லாமல் வேறொரு சிந்தனையாக மாற்றப்படுகிறார்கள். இது ஒருவகையன மத மாற்றம் தான். அதாவது அவன் பின்பற்றுகிற மதத்தில் இருந்து மாற்றிக் கொண்டு போவது. ஆனால், முஸ்லிம்கள் பெரியாரிய/ மார்க்சிய கருத்தாளர்களோடு மரியாதை நிமித்தமாக மட்டுமே விவாதிப்பது இல்லை. ஏற்கெனவே சொன்னது போல, முந்திய காலம் சென்ற தலைவர்கள் முஸ்லிம்களோடு ஐக்கியம் காட்டியிருந்ததே காரணம்.

பெரியார் இஸ்லாமுக்கு நெருக்கமானவர். ஆனால், அவரது முற்போக்கானது என கொண்டாடப்படக்கூடிய சில கருத்துக்கள் இஸ்லாமுக்கு நேர் முரணாக இருக்கிறது. இருந்தாலும், அந்த கருத்துகளை பெரியார் விரும்பிகள் விரும்புவார்கள், பெரியாருக்கு மாற்று கருத்து இருந்தபோதும் அவர் முஸ்லிம்கள் விவகாரங்களில் தலையிட்டது கிடையாது என்பது முஸ்லிம்களின் எண்ணமாக இருந்தது. பெரியார் இஸ்லாம் குறித்து உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. பெரியாருக்கு 1940களில் அ.க.அப்துல் ஹமீது பாக்கவி என்ற இஸ்லாமிய அறிஞர் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் படித்துக் காண்பித்திருக்கிறார். இஸ்லாமில் உள்ள முற்போக்கான கருத்துக்களால் பெரியார் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இஸ்லாம் குறித்து பெரியாருடைய நிறைய பேச்சுக்கள், எழுத்துக்கள் உள்ளன. இஸ்லாமுக்கு மாறிச் செல்லும் ஒரு தமிழர் தனது பெயருக்குப் பின்னிருந்த சாதிப் பெயர் ஒழிந்து போவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். எந்த புரட்சிக்காக அவர் தொடர்ந்து போராடி வந்தாரோ அந்த புரட்சி எவ்விதப் போராட்டமில்லாமல், சத்தமில்லாமல் நிறைவேறி விடுவது பெரியாருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

1948 ஆம் ஆண்டு சென்னை, மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் ஒரு மீலாது நபி விழா கூட்டத்தில் பெரியார் பேசும்போது, “இன இழிவு நீங்க இஸ்லாம் தான் நல்ல மருந்து” என்ற தலைப்பில் பேசினார். அந்த கூட்டத்தின் பேச்சில் அவர், நீ, 5 மணிக்கு இஸ்லாமில் சேர்ந்தால் 5.05 மணிக்குள் உன் சாதி அடையாளம் உன்னை விட்டு ஓடி விடும் என்று பேசினார். அவரது பேச்சை தனிப் புத்தகமாக பெரியார் பதிப்பகமே வெளியிட்டு இருக்கிறது. அன்று, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பெயரில் ஒட்டிக் கொண்டுள்ள சாதி பேரைக் கொண்டு அடையாளம் காணப்பட்டார்கள். இந்துவாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் ஒரு சாதி உண்டு. அதற்குப் பேரும் உண்டு. அந்த பேரை கேட்டால் சொல்லி ஆக வேண்டும். மதிப்புக்குரிய பெயர்களை தாங்கிய உயர்சாதியர் தங்கள் சாதிப் பெயர்களை பெருமையோடு சொல்லும் போது தாழ்ந்த சாதியாக வகைப்படுத்தப்பட்ட மக்கள் சாதி பெயர்களை சொன்னதுமே தீண்டாமையும் அவமதிப்பும் அவர்கள் மீது விழும். அந்த சிக்கலில் இருந்து அந்த மக்களை விடுவிக்க வேறு எந்த வழியுமில்லை. இஸ்லாம் ஒன்று தான் கண்ணுக்கு எட்டிய வழியாக இருந்தது. அதனால் தான் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களை இஸ்லாமில் போய் சேரந்து விடு என்று துரத்தினார். அன்று பெரியார் பேச்சைக் கேட்டு முஸ்லிமான பலரது பரம்பரையினருக்கு இப்போது தாங்கள் எந்தச் சாதியில் இருந்து மாறியிருக்கிறோம் என்பதே தெரியாது. இஸ்லாமுக்கு மாறிய பின்னர் அவர்கள் பழைய சங்கதிகளை நினைவில் வைத்துக் கொள்வதும் இல்லை. தலைமுறைகளிடம் பரிமாறுவதும் இல்லை. நேற்று முஸ்லிமான ஒருவரிடம் சென்று நீ! நேற்று எந்த சாதியில் இருந்தாய்? என்று கேட்டாலும் பதில் தரமாட்டார். அவர், உன்னதமான உயர்ந்த சாதியில் இருந்து வந்தாலும் பதில் சொல்லமாட்டார். அதுதான் சாதி அடையாள ஒழிப்பில் இஸ்லாத்தின் பலம்.

இஸ்லாம் மீது பெரியாருக்கு நன்மதிப்பும் ஈர்ப்பும் ஆதியில் இருந்தே இருந்திருக்கிறது. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பெரியார் கலந்து கொண்டார். வருடம் 1936. அந்த மாநாட்டில் பெரியார் பேசும்போது, சாதியும் தீண்டாமையும் ஒழிய மதம் மாறுவது ஒன்றே தீர்வு என்று துணிச்சலாகப் பேசினார். அங்கு வந்திருந்த சில தலைவர்கள், கிறித்தவ மதத்துக்கு மாறலாம் என்று ஆலோசனை சொன்னபோது, பெரியார், இல்லவே இல்லை, மதம் மாறுவது என்றால் இஸ்லாம் மதத்துக்குத் தான் மாற வேண்டும் என்றார். அதில், உறுதியாகவுமிருந்தார். அதே ஆண்டு 1936ல், இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பாபா சாஹேப் அம்பேத்கர், இந்திய தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்றார். அந்த சமயம், அதேயாண்டில் தமிழகத்தின் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மவட்டம், தென்காசி ஊருக்கு அருகில் இருந்த பெரிய பட்டணம் ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்வை ஒட்டித்தான் திருநெல்வேலி பாளையங்கோட்டையில், `இ்ஷாஅத்தே இஸ்லாம் சபை’ என்ற அமைப்பு இஸ்லாம் மதத்துக்கு மாறக் கூடிய மக்களுக்கு அடிப்படை உதவிகள் செய்வதற்காக துவங்கப்பட்டது. தமிகத்தில், எம்.சி.ராஜா, இளைய பெருமாள் போன்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதை விரும்பவுமில்லை, ஊக்கப்படுத்தவுமில்லை. மாறாக எதிர்ப் பரப்புரைகள் செய்தார்கள். தமிழகத்தில் இன்றுவரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமையும், சாதி இழிவும் இருப்பதற்கு காரணம், பெரியாரும் அம்பேத்கரும் வலியுறுத்திய இஸ்லாமுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லவிடாமல் அந்த தலைவர்கள் தடுத்து விட்டது தான் காரணம். அம்பேத்கர் தனது இறுதி காலத்தில், பௌத்த மதத்துக்கு மாறியபோது, பெரியார் அம்பேத்கர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் தவறான முடிவு எடுத்து விட்டீர்கள். மதம் மாறுவது என்று முடிவெடுத்தால் நீங்கள் இஸ்லாம் மதத்துக்குத் தான் மாறி இருக்க வேண்டும் என்று எழுதினார். பெரியார் இஸ்லாத்தின் மீது தான் கொண்டிருந்த நன் மதிப்பையும் இறுதிநாள் வரையில் பின் வாங்கியதே இல்லை.

பெரியாரது முற்போக்கான கருத்து என்பது அவர் காலத்து சமூகத்தில் காணப்பட்ட நெருக்கடிகளுக்கு எதிரானது. குறிப்பாக, பெண் சுதந்திரம் பற்றியது. ஒரு கட்டத்தில், பெரியாரது கருத்துப் புரட்சியானது பெண்ணை குடும்பம் மற்றும் சமூக உறவில் இருந்து துண்டித்து விடுகிறது. தனி ஆளுமையாக கருதுகிறது. அதுவும் அவரது சொந்த கருத்து இல்லை. ஐரோப்பிய முதலாளித்துவ புரட்சி உருவாக்கிய பெண் விடுதலை கருத்தில் இருந்து பெரியார் எடுத்துக் கொண்டார். ஒரு பெண்ணின் கணவன் இறந்த பிறகும் அவனது நினைப்பில் அந்த பெண் மிச்சமான காலத்தை கடக்க வேண்டும்.

எனினும், பெரியார் பெண் விடுதலை என்பதை கட்டிறுக்கமான இந்து சமூக பண்பாட்டியலுக்கு எதிரானது. பெரியார் தனது கருத்துகளை தீர்க்கமானது என்று கூறவில்லை. அவர் நெறிநூட்கள் எதுவும் எழுதி இருக்கவில்லை. அவர், தான் வாழ்ந்த காலத்தில் அவர் நடத்தி வந்த விடுதலை நாளிதழில் அவ்வப்போது அவர் எழுதி வந்திருந்த கட்டுரைகள் மற்றும் கருத்துகளை இப்போது அவரது ஆதரவாளர்கள்  அவரது தத்துவம் மற்றும் தீர்க்க தரிசனம் போல பரப்புகிறார்கள். மேலும், இப்போது இஸ்லாமிய நெறியை பெரியார் விடுதலை நாளிதழில் எழுதியிருந்த கருத்துகளை கொண்டு திருத்தி எழுத வேண்டும் அல்லது முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும், பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம், எங்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அந்த படிப்பினையாகத் தான் திருமண முறிவுக்குப் பிறகான காத்திருப்பு (இத்தா) காலத்தைக் கேள்வி கேட்கும் புர்கா திரைப்படம் பெரியாரிய சிந்தனை தளத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது.

முஸ்லிம்கள், விஸ்வரூபம் படத்துக்கு ஜெயலலிதா தடை விதித்ததை சுட்டுகிறார்கள். ஜெயலலிதா முஸ்லிம்களின் மீதுள்ள அக்கறையில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கவில்லை. கமலஹாசனுடன் அவருக்கு ஏற்கெனவே இருந்த ஒரு சிக்கலை வைத்து கமலஹாசனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்த்தார். தமிழ்நாட்டில் ரஜனிகாந்தோ, கமலஹாசனோ, விஜயோ பெரிய ஆள் கிடையாது. நான் தான் பெரிய ஆள் என்பதை மூவருக்கும் உணர்ததுவதற்காகத் தான் மூவரையும் பலமுறை ஜெயலலிதா சீண்டி இருக்கிறார். நடிகர் விஜய் பலமுறை பாதிக்கப்பட்டு இருக்கிறார். அத்தகைய சீண்டலில் ஒன்றுதான் விஸ்வரூபம் பிரச்சனையும். சரி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமலஹாசன் ‘தி கேரளா ஸ்டோரி’ க்குத் தடை விதிப்பது அல்லது கருத்துச் சுதந்திரம் பற்றி எந்த கருத்தையும் கூறவில்லை. கூறவும் மாட்டார். விஸ்வரூபம் படப் பிரச்சனையில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மிரட்டியவராச்சே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஃபாரூக் என்ற இளைஞர் உடனிருந்த முஸ்லிம் இளைஞர்களால் கொலை செய்யப்பட்டார். அது முதல் பெரியாரிய அமைப்பு இளைஞர்களுக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் முகநூல் போன்ற சமூக தளங்களில் கடும் கருத்து மோதல்கள் உருவாகின. இஸ்லாம் பற்றிய சிறப்பு படிப்புகளுக்கென்று பிரத்யேக பயிற்சி மையங்கள் எதுவும் கிடையாது. கலந்துரையாடும் மேடைகள் கிடையாது. முஸ்லிம் பசங்களுக்கே பெரும்பாலும் இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் பயணம் மட்டும் தான் என்று புரிந்துள்ளார்கள். இவர்களிடம் சென்று இஸ்லாம் குறித்து விவாதித்தால் என்னவாகும்?. அவன் தப்பும் தவறுமாகச் சொல்லும் அனைத்தும் மற்றவர்க்கு இஸ்லாமாகி விடுகிறது.

இந்தக் காலக்கட்டத்தை மதச்சார்பற்ற இறைமறுப்பு பெரியாரிய/ மார்க்சிய சிந்தனைவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர். இந்து மதத்துக்குள் சீர்திருத்தம் தேவைப்படுவதுபோல் இஸ்லாமிலும் சீர்திருத்தம் வேண்டும் என நீண்ட காலமாக சொல்லி வருகிறார்கள். இந்த சீர்திருத்தத்துக்கு இறுதி எல்லை எதுவாக இருக்குமெனில், கண்ணுக்கு நேராக நிரூபிக்கவியலாத இறைவனை நிராகரித்து, இஸ்லாமிய அடிப்படை வாழ்க்கையை கைவிட்டு அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவு மனிதனாக மாறுவது வரையில் இந்த சீர்திருத்தத்துக்கான அறைகூவலும், இஸ்லாம் மீது அவதூறு பரப்பும் விமர்ச்சனங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். அதாவது மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை, அறிவியலுக்கு முரணானவை, இந்த கால நடைமுறைக்கு அவற்றின் சட்டங்கள்; பண்பாடுகள் பயனற்றவை என்பது அவர்களின் பகுத்தறிவுப் புரட்சி. அதில் இஸ்லாமும் அடங்கும். மக்கள் சமூகம் ஜனநாயகமாக மாற வேண்டும். மனிதனுக்கு விருப்பம் போல வாழ சுதந்திரம், தன்னுரிமை வேண்டும். மதங்கள் இந்த சுதந்திரத்துக்கும் விருப்ப உரிமைக்கும் எதிரானவை. குறிப்பாக இஸ்லாம் பெண்களின் விருப்பத்திற்கும் சுதந்திரத்துக்கும் இடமளிப்பதில்லை, பெண் இனத்தை அடிமைப்படுத்துகிறது; கட்டுப்படுத்துகிறது என்பது இஸ்லாம் மீது அவர்களின் குற்றச்சாட்டு. மேலும் முஸ்லிம்கள் இறுக்கமானவர்கள், மத தீவிரமுடையவர்கள் என்ற பார்வையும் உண்டு.

மேலும், முஸ்லிம்கள் இஸ்லாம் காரணமாகவே  இறுக்கமாகவும், சுதந்திரமற்றும், திடமான கட்டுக்குள்ளும் இருக்கிறார்கள் என்று கருதுகிறார்கள். எனவே, இஸ்லாமிய வாழ்க்கை முறையில் அதன் சட்டங்களில் அறிவியலுக்கு முரணானதாக அவர்கள் புரிந்துள்ளவற்றைக் குறிப்பாக தேர்வு செய்து முஸ்லிம்களிடம் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். இந்த கேள்விகள் மூலம் இஸ்லாம் குறித்த நம்பிக்கையில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். இஸ்லாமில் உள்ள அனைத்து சட்டங்களையும் அவர்கள் கேள்வி கேட்க முடியும். இஸ்லாத்தின் அடிப்படையானது சட்டம் மற்றும் பண்பாடாக இருக்கிறது. மனித வாழ்வுக்கும் விலங்குகள் வாழ்வுக்குமான வேறுபாடு சட்டப்படியான வாழ்வும், பண்பாடும். விலங்குகளுக்கு ஒத்த சுதந்திரம் மனிதனுக்கும் வேண்டும் என்ற அளவுக்கு சுதந்திரத்தின் பரப்பு விரிவடையும் போது சட்டங்கள் மற்றும் பண்பாட்டின் இடையூறுகள் தகர்க்கப்பட வேண்டும் என்பதில் உள்ள நியாயங்களை மதவாதிகள் புரிந்து கொள்ளத் தான் வேண்டும். இந்த மதக் கட்டுப்பாடற்ற சுதந்திரமே மெய்யான ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தை மெச்சும் பலருக்குத் தெரியாது. அவர்கள் சொல்வது போல, அவர்கள் சரி காணும் அளவுக்கு இஸ்லாமுக்குள் திருத்தங்கள் செய்தாலும் அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். இறைமறுப்பும், மதமறுப்பும், தனிமனித சுதந்திரமும், மக்கள் அதிகாரமும் தான் அவர்களின் கொள்கை மற்றும் வாழ்க்கை முறை. இதற்குள் இறுதியான ஒரு முஸ்லிமும் வந்து விடும் வரையில் அவர்கள் இஸ்லாமை சரிகண்டு கொண்டே இருப்பார்கள்.

பொதுவில், கட்டுப்பாடற்ற சுதந்திரத்தையும் தாராளமய வாழ்வையும் விரும்பக் கூடியவர்களுக்கு இஸ்லாம் அருவருப்பாகத் தான் இருக்கும். கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கம்யூனிசமும் ஏற்கவில்லை. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை மார்க்சும், லெனினும் வலியுறுத்தவில்லை. அதனால்தான் திராவிட/ பெரியாரியவாதிகள்  தேர்தல் சமரசத்துக்கு அப்பால் கம்யூனிசத்தை ஏற்பதில்லை. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் முதலாளித்துவ ஜனநாயகத்துக்குள் சொத்து சேர்ப்பதில்லை. ஏழ்மையாகவும் எளிமையாகவும் வாழ்ந்து இறந்து போகிறார்கள். எதிர்காலத்துக்கென்று எதையும் சேர்த்து வைப்பதில்லை. ஆனால், இந்த பெரியாரிய/ திராவிட இறை மறுப்பாளர்கள் பணத்தையும் சொத்தையும் கடவுள் இடத்தில் வைத்துள்ளார்கள். ஒரு பெரியாரியவாதி எவ்வளவு சொத்து வைத்துக் கொள்ளலாம்? எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று அளவு இருக்கிறதா? இந்த 55 ஆண்டுகால தொடர் அரசியல் வாழ்வில் இந்த திராவிட / பெரியாரியர்கள் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார்கள் என்பது பற்றி பெரியாரியர்கள் படம் தயாரிக்க முடியுமா? முடியாது. காரணம், பெரியார் பொருளியல் கோட்பாடு பற்றி எதுவும் எழுதவில்லை. எனவே,  முதலாளித்துவவாதிகளின் பொருளாதார சுரண்டலை திராவிட அரசுகள் மௌனமாக அங்கீகரித்தன. அரசியலே வேண்டாம் என்று சொன்ன பெரியார் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்றும் வரையறை செய்யவில்லை. அதனால், மேதகு திராவிட கட்சிகளின் அரசியலானது சதியும், சூதும், அநியாய கொலைகளும், சுரண்டலும் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம்களை நோக்கி படம் எடுக்கும் முன்னர், பெரியார் அரசியல் வேண்டாம் என்றாரே! பெரியாரின் பேரால் ஏன் அரசியல் செய்கிறீர்கள் என்று, பெரியார் வழித்தோன்றல் நாங்கள் என்று நெஞ்சம் நிமிர்த்தும் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்கும் படங்களை எதிர்ப்பார்க்கலாமா?

பாலியல் குறித்து பெரியாரின் கருத்துகளை படமாக்க முடியுமா? இஸ்லாம் கட்டுப்பாடுள்ள பாலியலை வறையறைத்துள்ளது. யார் யாரோடு பாலுறவு கொள்ளலாம், யாரோடெல்லாம் பாலுறவு கொள்ள முடியாது என்று திட்டமான வரையறை உள்ளது. இது நிச்சயம் அறிவியல் இயல்புக்கு எதிரானது என்பதில் சந்தேகமில்லை. சரி, பெரியாரின் பாலியல் வரைமுறை என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம். மதங்களைத் தவிர வேறு எந்த அமைப்புகளும் பாலுறவு முறைமைகளை வரையறுக்க முடியவில்லை. குறிப்பாக, மதங்களுக்கு எதிராக அறிவியலை முற்படுத்தும் ஜனநாயக அமைப்புகள் இந்த விசயத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிலைமைக்கு விட்டுவிட்டு மௌனமாக கடந்து விட்டார்கள். உலகில் கம்யூனிச அமைப்புகளும் இத்தனை ஆண்டுகாலமாக பாலுறவுக்கென கொள்கை வகுக்கவில்லை. கம்யூனிச கொள்கையை வகுத்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உள்ளிட்டவர்களும்,  ஐரோப்பாவில் ஆபிரகாம் வழித்தோன்றலில் இருந்து உருவாகி ஈராயிரம் ஆண்டுகள் மேலாக நிலவிய  பாலுறவுக் கொள்கைகளை திருத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. தற்கால பெரியாரிய/ மார்க்சியவாதிகளுக்கு பாலுறவு குறித்து அறிவியல் அடிப்படையில் ஒரு கருத்து உண்டு என்றாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுவார்கள். காரணம், அறிவியல் படியான பாலுறவு கொள்கை அவ்வளவு இயற்கையானது. வெளியில் சொல்லுமளவுக்கு மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாதது. இனி, யாராவது இஸ்லாம் குறித்து சந்தேகங்கள் எழுப்பும் பெரியாரிய/மார்க்சிய பிரமுகர்களிடத்தில் ஆண்/ பெண் பாலுறவு உறவு முறைகள் குறுத்து உங்கள் கொள்கை பிதாக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று கேளுங்கள்.

பெரியாரிய/ மார்க்சிய பாலுறவு உறவுமுறை கொள்கையும் முதலாளித்துவ ஜனநாயக பாலுறவு உறவு முறை கொள்கையும் முரணற்றது அல்லது இணையானது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய உச்சநீதிமன்றம் பாலுறவு உறவு முறை சம்பந்தமாக ஒரு உன்னதமான தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்புரை என்பதால் அதைக் கடவுள் கட்டளையாக ஏற்று விமர்ச்சனமின்றி கடந்து போவோம். அந்த தீர்ப்பானது- ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகும் தான் விரும்பிய எந்த ஆணோடும் பாலுறவு வைத்துக் கொள்ளும் சுதந்திரம் ஜனநாயகத்தில் உண்டு. கணவன் மனைவியின் செயலை சிரித்துக்கொண்டே கடந்து போகவேண்டும். ஒருவேளை கணவன் மதவாதியாகவோ, பழமைவாதியாகவோ, அடிப்படைவாதியாக இருந்தால், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைப்படி விவாகரத்துச் செய்து கொள்ளலாம், ஆனால், தன் மனைவி மீதோ தன் மனைவியோடு கள்ள உறவோ, வெளிப்படையான உறவோ கொண்டுள்ள ஆண் மீதோ வழக்குப் போட்டு தண்டிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு மீது பெரியாரிய/ மார்க்சிய இடதுசாரிய/ ஜனநாயக அறிவு ஜீவிகளுக்கு எந்த விமர்ச்சனமும் இல்லை. ஏன்? ஏனென்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவியல் அடிப்படையிலானது. பகுத்தறிவுக்கு உள்ளானது. ஆனால, மத அடிப்படைவாதிகள் நம்பிக்கை கொண்டுள்ளது இயற்பியல் நியதிகளுக்கு எதிரானது. தற்சமயம் உச்சநீதிமன்றம், ஓர்பால் திருமண உறவுக்கு சட்டப்படியான உரிமை தர தயாராகி வருகிறது. இதுவும், மதச்சார்பற்ற ஜனநாயக உரிமை தான்.

திருமாவளவன் சொல்வது போல நாம் பற்றிப் பிடிக்க வேண்டிய, பேணிக் காக்க வேண்டிய ஜனநாயக உரிமைகளில் இதுவும் கலந்திருக்கிறது. பெரியார் மதிப்புமிக்க மணியம்மையார் அவர்களை மறுமணம் செய்தபோது அண்ணா உள்ளிட்ட பலரும் அந்த திருமணத்தை தவறானது என்று எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார்கள். அல்லது கழகத்தை விட்டு வெளியேற ஒரு காத்திரமான காரணத்தை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திருமணம் ஒரு காரணமானது. சரி இந்த திருமணம் எந்த அடிப்படையில் தவறானது என்று அவர்கள் கூறவில்லை. வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்கள். வளர்ப்பு மகளை திருமணம் செய்தது எந்த வகையான சட்ட, சமூக, பண்பாட்டின் அடிப்படையில் தவறானது என்று கூற முடியவில்லை. முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்பவர்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

பெரியார் அவர்கள் ஐரோப்பா சென்று வந்த பிறகு தான் முதலாளித்துவ ஜனநாயக கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டார். இந்தக் கொள்கை இந்தியாவை நிரப்பினால் சனாதன இந்து மதம் அழிந்து விடும் என்று நம்பினார். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசும் முதலாளித்துவ ஜனநாயக பண்புக்கு இந்திய மக்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது மதக் கட்டமைப்புகளை தகர்ப்பது. பெரியாருக்கு இங்கே இந்து மதமே எதிரி. இந்தியா முழுமைக்கும் மத ஒழிப்பு வேலையை பெரியாரால் செய்ய முடியாது. முதலில் அதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும். பிரிட்டிஷிடம் அது இருந்தது. அதனால் பெரியார் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு நீடிப்பதை விரும்பினார். ஆனால், ஆங்கிலேயன் இந்தியாவை மத அடிப்படைவாதம் கொண்ட பிராமணர்களிடம் கொடுத்துச் சென்றான். அதனால், பெரியாரின் பெருங்கனவு தகர்ந்தது. இப்போது இந்தியா மீண்டும் இந்து மதத்தின் பண்பாடு மற்றும் அடிப்படைவாதத்துக்கு திரும்பி உள்ளது. அம்பேத்கரும் பெரியாரும் இந்திய சாதி ஒழிப்புக்கும் சமூக நீதிக்கும் முதலில் இஸ்லாமை ஒரு தீர்வாக முன் வைத்தனர். பின்னர், ஆங்கிலேயனை நம்பி மதச்சார்பின்மைக்கு ஆதரவாகப் போனார்கள். ஆங்கிலேயன் அவனது அரசியல் தேவைக்குத்தான் கொள்கைகளை உருவாக்குவான்.

முஸ்லிம்களும் பிராமணர்களும் வேறு ஒரு அடிப்படையில் ஏற்கெனவே இருந்து வந்ததால் ஐரோப்பிய முதலாளித்துவ பண்பாடு செல்லுபடியாகவில்லை. குடும்ப பாரம்பரியத்தை விட்டு வெளியேறி நேரடியாக ஐரோப்பிய கல்விக்குள் புகுந்தவர்களிடத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்து கொண்டு அறிஞர்கள் ஆங்கில முறை கல்வி கற்பது இஸ்லாமுக்கு எதிரானது என்று கருத்துரை கூறினார்கள். பிராமணர் அல்லாத இந்தியப் பெரும் மக்கள் சமூகத்தை முதலாளித்து ஜனநாயகப் படுத்தும் வண்ணமே இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் வடிவமைத்தார்கள். மேலும், பத்திரிகை, நாடகம், சினிமா போன்ற ஊடகங்களை முதலாளித்துவ ஜனநாயகத்தை பரப்பும் கருவிகளாகப் பயன்படுத்தினார்கள். கலைஞர்களுக்கு விருதுகளும் சலுகைகளும் வழங்கி கௌரவித்ததற்கு காரணம் அவர்கள் மத அடிப்படை ஒழுங்குகளுக்கு எதிராக ஒரு உளவியல் யுத்தம் நடத்தும் வேலையை அரசின் பக்கம் நின்று நடத்தி வந்தார்கள் என்பதால் தான். சுதந்திர இந்தியாவிலும் பாலிவுட் பண்பாடு கடந்த 70 ஆண்டுகளில் பெரிய அளவில் விரிவடைத்திருக்கிறது.பெரும்பான்மை இந்திய இந்து சமூகத்தின் உளவியலை பேரளவுக்கு தன் வயப்படுத்தி இருக்கிறது. பிராமணர்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் கூட குறிப்பிடத் தக்க தாக்கம் பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தங்களது மத அடிப்படை காரணமாக சினிமா உலகத்தை வெறுத்தவர்கள் தப்பித்துள்ளார்கள். குறிப்பாக, சினிமா விதைக்கும் கலாச்சாரம் நம் தலைமுறையை நிர்வானப்படுத்தி விடும் என்ற அச்சம் முஸ்லிம்களிடம் மட்டுமே இருந்து வருகிறது. அதனால், அவர்கள் சினிமா மோகத்தையும், சினிமா நாகரிகத்தையும் விலகுகிறார்கள்.

பெரியார் ஜெர்மன் சென்றிருந்தபோது, அங்குள்ள நிர்வாண அரங்கு ஒன்றுக்கு சென்றவர் தயக்கமின்றி தானும் நிர்வானமாகிக் கொண்டார். இத்தகைய திடீர் முடிவுகளை முஸ்லிம் அடிப்படைவாதிகளால் எடுக்கவே முடியாது. நிர்வாணம் இஸ்லாமில் தடை செய்யப்பட்ட அசிங்கமான செயல் என்று முஸ்லிம்கள் அரங்கை நெருங்க மாட்டார்கள். நிர்வாணம் அறிவியல் அடிப்படையில் தவறு இல்லை. மனிதன் பிறக்கும் போது உள்ளாடையோடு பிறக்கவில்லை. ஆடை மனிதனிடம் செயற்கையாக வந்தது. இயற்கைக்கு திரும்பக் கூடிய அறிவியல் மனம் படைத்தவர்களால் உடனடியாக நிர்வாணத்துக்கு மாறிக்கொள்ள முடியும். அறிவியல் கொள்கையை வாழ்க்கை திட்டங்களுக்குள் ஏற்காமல் புதிய சிந்தனைகள் அனைத்தையும் மத அடிப்படையில் முஸ்லிம்கள் மறுப்பதால் இஸ்லாமில் திருத்தங்கள் அவசியம் தேவைப்படுகிறது. அவர்களுக்கென்று ஒரு அடிப்படை 1400 ஆண்டுகளாக இருந்து வருவதின் மீது ஒரு கல்லை எறிய வேண்டும்.

இன்று உலகில் இரண்டே தத்துவங்கள் தான் இருக்கின்றன. ஒன்று, இஸ்லாம் மற்றது முதலாளித்துவ ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் பண்பாட்டுக்கு உலக சமுதாயங்கள் அனைத்தும் கட்டுப்பட தயாராகிய நிலையில் இன்னும், முஸ்லிம்கள் மட்டும் விடாப்பிடியாக இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு நூறாண்டு தவணையும் முடிகிறது. இருந்தும் அவர்கள் புதிய மதச்சார்பற்ற நாகரிகத்தை ஏற்க மறுப்பதற்கு அவர்களது இறை நம்பிக்கையும் இஸ்லாம் கொள்கையும் காரணமாக இருக்கிறது. எனவே, இந்த நம்பிக்கையையும், கொள்கையையும் அறிவியலை அடிப்படையாக வைத்து கேள்விக்கு உட்படைத்தும் போது நாம் விரும்பும் மாற்றத்தை முஸ்லிம் சமூகத்திடம் பெற முடியும் என்று எதிர்பார்க்கின்றனர். அத்தகைய உலகலாவிய முயற்சியின் ஒரு அம்சமாகத் தான் தமிழில் புர்கா என்ற படமும் ஃபர்ஹானா என்ற படமும் வந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக முதலாளித்துவத்துக்கு தேவையான அரசுகளை இந்தியாவில் வழிநடத்தவும் இந்தியா ஒன்றியமாக நிலைத்திருக்கவும் பிராமணர்களே தகுதியானவர்கள் என்று கருதிய பிரிட்டிஷ் அரசாங்கம், பாகிஸ்தான் நீங்கலான மொத்த இந்தியாவையும் பிராமணர்களின் ஆதிக்கம் நிறைந்த காங்கிரஸ் கட்சியிடம் தெரிந்தே தான் கொடுத்துச் சென்றார்கள். இதன் பின்னணியில் அன்னிபெசண்ட் செயல்பட்டார். பிராமணர் தலைமை காரணமாகத் தான் இன்று இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பிராமணர்களின் தலைமையை தகர்த்தால் தான் இந்தியா என்ற கட்டமைப்பை தகர்க்க முடியும் என்று பலர் முயற்சித்துள்ளனர். முயற்சித்தும் வருகிறார்கள். அதேநேரம்,  தற்போதைய ஆர்.எஸ.எஸ்- பாஜக அரசு இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பிராமணர் தலைமைக்கு ஆபத்து நேராமல் இருப்பதற்காக இந்தியாவின் பலவீனமானப் பகுதிகளை உறுதிப்படுத்த சட்டத் திருத்தங்களையும், வரலாற்று மாற்றங்களையும், மத வழிபாட்டு தீவிரங்களையும் செய்து வருகிறது.

ஆங்கிலேயரின் சந்தர்ப்பவாத மதச்சார்பற்ற இந்தியா தற்காலிக ஏற்பாடாக முடிந்து போனது. தற்காலம் மதத்தீவிரம் அடைந்து, இந்து ராஜியமாக பரிணாமம் பெற்றுக் கொண்டு வருகிறது. பிரிட்டனின் மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயகத்தை நம்பி அம்பேத்கரும் பெரியாரும் மோசம் போனவர்கள். அம்பேத்கர் பிரிட்டன் முயற்சியில் மாய்ந்து எழுதிய மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை திருத்தி அமைக்கும் திட்டம் தயாராகி விட்டது. இப்போது, அம்பேத்கர் வழித்தோன்றல்கள் ஆர்.எஸ்.எஸில் போய் சேர்ந்து கொண்டார்கள். பெரியாரிய வழித்தோன்றல்கள் பாஜாகாவில் போய் சேரந்துள்ளார்கள். அம்பேத்கர் செல்வாக்கிலும் பெரியார் செல்வாக்கிலும் அரசியல் கட்சிகள் நடத்திய தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் இப்போது இந்துத்துவாவில் கலந்துள்ளனர். இந்தியாவில் சமதர்மத்துக்கும், சமூக நீதிக்குமான வாய்ப்பு இப்போது முறியடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் அப்போது மத ஒழிப்புக்கு பயன்படுத்திய சினிமா மற்றும் கலைகளை பாஜக இப்போது மதம் பரப்பவும் பெருங்கலவரம் தீட்டவும் பயன்படுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் முஸ்லிம்கள் மட்டும் தான் இந்துத்துவ வகுப்புவாத பாசிச கொள்கையை எதிர்க்கிறார்கள். இந்த லட்சனத்தில் பெரியாரியவாதிகள் புர்கா மாதிரி படம் எடுத்து முஸ்லிம்களையும் அறிவியல் வாழ்வுக்கு உட்படுத்தி இஸ்லாம் நீக்கம் செய்து விட்டால் பின்னாட்களில் ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களை தாய் மதம் திருப்புவதற்கு எளிதாக இருக்கும்.

கட்டுரையாளர்: ஜி.அத்தேஷ்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *