வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 3.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் பின்னாளில் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்தை தொட்டிருக்கிறது.

நிதியாண்டு முடிவடையும் நேரத்தில் உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றம் காண வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ரமலான் நோன்பு நேரத்தில் உணவுப்பொருட்கள் விலை உச்சத்தில் இருக்கும் என்றும் பாகிஸ்தானின் உள்ளூர் வணிகர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
1973 – 1974 காலகட்டங்களில்தான் 32 சதவீதம் வரை நுகர்வோர் விலை குறியீடு இருந்ததாகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அத்தகையதொரு சரிவு நிலையை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர, பாகிஸ்தான் அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. சரக்கு வரி விகிதத்தை பெருமளவு குறைத்தது. ஆனால், எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரமுடியவில்லை. நிலைமையை சமாளிக்க உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டாலர் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இந்நிலையில் பஞ்சாப் உள்ளிட்ட மகாணங்களில் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தொடரும் நேரத்தில் தேர்தலை எப்படி நடத்துவது, அதற்கான செலவுகளை எப்படி சமாளிப்பது என்பதில் பாகிஸ்தான் அரசு சிக்கித் தவிக்கிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை அடைந்தபோது, இந்தியா தன்னுடைய பங்காக நிதியுதவி செய்தது. ஆனால், பாகிஸ்தான் விஷயத்தில் அப்படி செய்வதற்கு வாய்ப்பில்லை. பாகிஸ்தானும் இந்தியாவிடம் உதவி கேட்டு இதுவரை எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை.

பொருளாதார நெருக்கடி காரணமாக, பாகிஸ்தானில் அடிப்படை வசதிகள் கூட விலை ஏற்றம் கண்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் மோசமான பொருளாதார சிக்கலில் தவிக்கிறார்கள். இதனை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் கூடுதல் வரிகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தற்போது புதியதாக 17 ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு பல்வேறு செயல்பாடுகளுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு மேலும் பொருளாதர நெருக்கடி ஏற்படும் என்கிறது வல்லுநர் குழு.
சமீப காலமாக இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அதிகளவு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
எரிபொருள், உணவுப் பொருள் ஆகியவற்றிற்கு அதிக தட்டுப்பாடு நிலவுவுவதால் அதற்கான விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

இதை சமாளிக்க அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டதுடன் அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் அரசு குறைத்ததுள்ளது.

அடுத்து பராமரிக்க முடியாத வெளிநாட்டு தூதரகங்களை அதிக அளவு குறைத்துக் கொண்டது. உளவு அமைப்புகளுக்கான நிதி இதுவரை அதிகமாக செலவிட்டு வந்தநிலையில் அதையும் குறைத்துள்ளது. இப்படி பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனால் அரசு நிர்வாகமே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இராணுவ உணவகங்களிலும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இராணுவ வீர்ர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கூட முறையாக வழங்க முடியவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தபோதும் பாகிஸ்தானில் பணவீக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறது.

வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐந்து மாதங்களில் முதல் முறையாக பணவீக்கம் 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் நோயாளிக்குச் சரியான மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அதிகப்படியான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

“இன்னும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான மருந்துகள் தான் கையிருப்பு இருக்கிறது” எனக் கூறுகிறது அந்நாட்டின் மருத்துவத் துறை.

வங்கி அமைப்பில் டாலர்கள் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்களுக்கு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில், பாகிஸ்தான் மருத்துவ சங்கம் (பிஎம்ஏ) நிலைமை பேரழிவாக மாறுவதைத் தடுக்க அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரியது. இருப்பினும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காமல், பற்றாக்குறையின் அளவை மதிப்பிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை முறையாகப் பயன்படுத்துவதில் பாகிஸ்தான் தடுமாற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாகிஸ்தானில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது நிதியின் பெரும்பகுதியை ராணுவத்துக்காக செலவிடுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 சதவீதம் கூடுதலாக விற்கப்படுகிறது. 3-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் கோரியுள்ளது. அதற்கான கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள கிட்டத்தட்ட அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது.

இதனால் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை ஏற்கனவே ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

உடனடியாக அமலாகிறது சிக்கன நடவடிக்கை

ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரியும், வட்டி விகிதமும் உயர்த்தப்படுகிறது. மேலும், ஜுன் 2024 வரை சொகுசு வாகனம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொகுசு வாகனமும் ஏலம் விடப்பட வேண்டும். அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணம் அல்லது உள்நாட்டு விமானங்களுக்கு மூன்றாம் வகுப்பில் பயணிக்க வேண்டும். அரசுப் பயணங்களுக்கு உதவி ஊழியர்களை அழைத்துச் செல்லக் கூடாது. அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்கும் போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு தடை போன்ற பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் செலவைச் சேமிக்க தொலைபேசியில் அனைத்து விவாதங்களையும் நடத்த ஊக்குவிக்கிறது. கோடையில் எரிவாயு மற்றும் மின்சாரம் வழங்குவதற்காக அலுவலகங்கள் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

அரசு விழாக்களில் ஒரு சிற்றுண்டி மட்டுமே வழங்க வேண்டும். தேநீர் நேரத்தில் ஒரு தேநீர் மற்றும் ஒரு பிஸ்கட் மட்டுமே வழங்க வேண்டும். பொது அதிகாரிகள் முன்னூறு டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள பரிசுகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

நிதி பற்றாக்குறையால் மக்களுக்கு அடிப்படை சேவைகளை கூட செய்யமுடியாமல் தவித்து வருகிறது. பாகிஸ்தான் இலங்கையை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உணவுப் பற்றாக்குறை

உணவின்றி தவித்து வரும் அந்நாட்டு மக்களின் நிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கோதுமை மூட்டைகள் கொண்டு செல்லும் லாரிகளின் பின்னே நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறார்கள்; மோட்டார் வாகனத்தில் கோதுமை லாரியை வேகமாகத் துரத்திச் செல்கிறார்கள். கோதுமை வாங்கத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 அப்பாவி மக்களின் உயிர் பறிபோயுள்ளது. ஒரு மூட்டைக்காக அவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகள் நிலைகுலையச் செய்கின்றன.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ காட்சி ஒன்றில், கோதுமை மூட்டையை எடுத்துக்கொண்டு ஓடும் ஒருவரிடமிருந்து, அம்மூட்டையைப் பிடுங்க நான்கு, ஐந்து பேர் முயற்சிக்கின்றனர். மூட்டையை வைத்திருப்பவரோ, அதனை மேலும் இறுகப்பற்றிக் கொண்டு கீழே விழுந்து வீறிட்டுக் கதறி அழும் காட்சி நமது நெஞ்சத்தை நடுங்கச் செய்கிறது. வீட்டில் பசியோடு தனக்காக காத்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு மூட்டையாவது எடுத்துச் செல்லவேண்டும் என்ற பெற்றோர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இத்தகைய அழுகையும் ஆவேசமுமாகும்.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை இதுவரை கண்டிராத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ டீத்தூள் ரூ.1100, ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.150, ஒரு லிட்டர் பால் ரூ.140, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ரூ.480, ஒரு டசன் முட்டை ரூ.400 என விற்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது சமையல் எரிவாயு உருளையின் விலையும் ரூ.2,411 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்வா எனும் பகுதியில், சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்டிக் பைகளைச் சிறுவர்கள் எடுத்து செல்லும் காணொளி காட்சியினை சமூக வலைதளங்களில் காணமுடியும். எரிவாயு நிரப்பப்பட்ட அந்த பிளாஸ்டிக் பையில் சிறிய கீறல் விழுந்தாலும் மிகப்பெரிய விபத்து நேரிடும். எனினும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயு உருளை கிடைக்காமல், கள்ளச்சந்தையில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால் வேறுவழியின்றி மக்கள் இத்தகைய ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரத் தட்டுப்பாடு

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானை இருள் கவ்வியுள்ளது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க ஷபாஸ் ஷெரீப் அரசு பல கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது. மின்சார சேமிப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தையும் மாலைவேளையில் அதிக நேரம் திறந்து வைத்திருக்கக் கூடாது எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மின் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் மருத்துவமனைகள், பள்ளிகள் கூட செயல்பட முடியாத நிலை உள்ளது. அரசுத் துறைகளிலும் மின் பயன்பாட்டை 30 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. மின்சாரத் தட்டுப்பாட்டால் நாடாளுமன்றம் மூன்று நாட்கள் மூடப்பட்டது; செனட் செயலகம் சில நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவான ரூ.6,200 கோடியை (பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்) சேமிக்க முடியும் என்கிறது பாகிஸ்தான் அரசு. ஆனால், இதன் விளைவாக பல இடங்களில் 24 மணிநேரம் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் செயலிழந்து, உற்பத்தி நடக்காமல் முடங்கியது. இதனால், பாகிஸ்தான் 300 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

அரசாங்கம் கடனில் தவிப்பதால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியமான ரூ.2,500 கோடியும், அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய சிக்கனக் குழு, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதத்தையும், அமைச்சர்களின் செலவீனங்களில் இருந்து 15 சதவிகிதத்தையும் வெட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், அமைச்சர்களின் எண்ணிக்கையும், பிரதமரின் உதவியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

2021 டிசம்பரில் 12.3 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், 2022 டிசம்பரில் 24.5 சதவிகிதமாக இரட்டிப்பாகியுள்ளது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இது 47 ஆண்டுகளாக பாகிஸ்தான் சந்தித்திராத நிலைமை. கடந்தாண்டு அந்நாட்டைப் புரட்டிப் போட்ட வெள்ளம் இந்நிலையைத் தீவிரமாக்கியது. மேலும், 2023-ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் வரை கூடுதலான பணவீக்கத்தை பாகிஸ்தான் சந்திக்கப் போவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அன்னியச் செலாவணி குறைந்தது

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 22.67 சதவிகிதம் பங்காற்றுகிறது. அந்நிய செலாவணி போன்றவற்றிற்கு பெரிதும், ஜவுளி ஏற்றுமதியைச் சார்ந்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆடைகள், போர்வைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், 2021-ஆம் ஆண்டு 2.9 மில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி தற்போது 18.3 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்திருப்பதால், வெளிநாடுகளில் இருந்து சரக்குக் கப்பல்களில் வந்திறங்கியிருக்கும் கண்டெய்னர்கள் எடுக்கப்படாமல் கராச்சி துறைமுகத்திலேயே தேங்கியிருக்கின்றன. பருத்தித் தட்டுப்பாடு காரணமாக பல ஜவுளி ஆடைத் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் முடங்கி, 7 இலட்சம் ஜவுளி ஆடைத் தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது.

ஏற்றுமதி குறைந்திருக்கும் இதேநேரத்தில் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 23 மில்லியன் ஹெக்டேர் நிலம் நாசமாகி உணவு, மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், நிதிப் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கின்றன.
ஜனவரி 27-ஆம் தேதி, பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், இரும்பு மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், “ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளே நமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய மருந்து” எனவும், “பொருளாதாரப் புதைகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஏற்றுமதிக்கான அவசர நிலையை அறிவிக்க வேண்டும்” எனவும் அமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது பாகிஸ்தானின் கையில் இருக்கும் 4.3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியைக் கொண்டு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே திவால் நிலையில் இருந்து பாகிஸ்தான் தப்பித்திருக்க முடியும்.

உலக நாடுகளிடம் உதவி கோரும் பாக்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க பிரதமர் ஷபாஸ் ஷெரிப், உலக நாடுகளின் உதவியை நாடி வருகிறார். இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாகத் தெரிவித்திருக்கின்றன. இருந்தாலும் தற்போது வழங்கப்பட்டிருக்கும் நிதி உதவியைக் கொண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே சமாளிக்க முடியும். ஆனால் இந்த நிதியாண்டை சமாளிக்க பாகிஸ்தானுக்கு மேலும் 30 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. ஏற்கனவே கடனில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்து மீண்டும் கடனைத் திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்லாத காரணத்தினால் உலக நாடுகள் கைவிரித்துவிட்டன. எனவே பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஐ.எம்.எஃப். வழக்கம் போல இந்த முறையும் கடனோடு சேர்த்து நிபந்தனைகளையும் விதித்து பாகிஸ்தானை இன்னும் படுகுழிக்குத் தள்ளுகிறது. 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆறு பில்லியன் டாலர் கடன் தர ஐ.எம்.எஃப். ஒப்புக்கொண்டது. இது கடந்தாண்டு பாகிஸ்தானில் வெள்ளம் வந்தபோது ஏழு பில்லியனாக உயர்த்தப்பட்டது. ஐ.எம்.எஃப். இடமிருந்து பாகிஸ்தான் நிதியைப் பெற எரிபொருள், மின் கட்டணம், எரிவாயு விலையை உயர்த்த வேண்டும்; வரிகளை அதிகரிக்க வேண்டும்; மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு வழங்கிவரும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை பாகிஸ்தான் மீது விதித்தது. ஆனால், இந்த உத்தரவை பாகிஸ்தான் சரியாக நடைமுறைப்படுத்தாததால் ஐ.எம்.எஃப். ஒரு பில்லியன் டாலரை தராமல் இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி ஐ.எம்.எஃப் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தவுடனேயே வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு ஒரே நாளில் ரூ.255.43 ஆக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பாகிஸ்தான் சந்தித்திராத வீழ்ச்சியாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஐ.எம்.எஃப். இடமிருந்து மேலும் கடன் பெறுவது என்பது கத்திக்குத்துக்கு பேண்டேஜ் போடுவது போன்றுதான். அதனால் காயம் ஆறாது, மேலும் சீழ்ப்பிடிக்கவே செய்யும் என்பதையே இது நிரூபிக்கிறது.
நேற்று இலங்கை, இன்று பாகிஸ்தான், நாளை இந்தியா அல்லது வேறு நாடு என்று ஒவ்வொரு நாடுகளும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் சிக்கவைக்கப்பட்டு, அதன் சுமை முழுவதும் அந்நாட்டின் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. இலங்கையைப் போல பிற நாடுகளிலும் மக்கள் எழுச்சி வந்துவிடுமோ என்ற ஏகாதிபத்தியங்கள் அஞ்சுகின்றன. அதனால், கடன் உதவி கொடுப்பது போல நாடகமாடுகின்றன. இந்தக் கடன் உதவிகள் என்பவையெல்லாம், ஏழை நாடுகளை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்தியச் சுரண்டல் என்பதை அனைத்து ஆளும் வர்க்கங்களும் மறைக்கின்றன.

இலங்கையைப் போலவே இந்தியாவிற்கு முன்னதாகவே, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுதான் பாகிஸ்தான். அதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் வலையில் சிக்கியிருக்கிறது. இது, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவுடனான பாகிஸ்தானின் நெருக்கம் வளர்ந்து வந்தது. சீனாவின் பட்டுப்பாதை என்ற மிகப்பெரும் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று, ரசிய-உக்ரைன் போர் போன்றவை காரணமாக பாகிஸ்தானின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துத் தேக்கம், விலையேற்றம், வேலையின்மை போன்றவை அதிகரித்துள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவைப் பலவீனப்படுத்தி, இலங்கையைப் போலவே தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தானை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது அமெரிக்கா.

ஐ.எம்.எஃப்.பின் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையைப் பின்பற்றியதால் உருவான இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக, மீண்டும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்குவது என்பது அந்நாட்டை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கிவிடும்.

பொருளாதார நெருக்கடி நிலைக்கு அடிப்படைக் காரணங்கள்

பொருளாதார நிர்வாகம் என்பது தொடர்ந்து பாகிஸ்தானில் சீரழிந்து வருகிறது. ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கே அது இட்டுச் செல்கிறது. பிரச்சினையின் ஆணிவேர் எது எனில், பொதுநிதியை நிர்வகிப்பதில் உள்ள மிகவும் மோசமான நிர்வாக முறைகள். அத்துடன் பொருளாதாரத்தின் அடித்தளக் கட்டமைப்பிலேயே காலங்காலமாக தீர்க்ப்படாத ஆழமான பிரச்சிகைள் பல இருப்பதால் அரசின் திறனற்ற நிர்வாகம் அவற்றை மேலும் தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவுகள் அனைவரும் வெளிப்படையாக அனுபவிக்கும் வகையில் இருக்கின்றன. ஐஎம்எஃப் கடன் தருவதற்கு விதிக்கும் நிபந்தனைகளை அரசு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளும் ராணுவமும் மிகச் சில விதிவிலக்குகள் தவிர, பாகிஸ்தானின் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகளை மோசம் ஆக்கும் வகையிலேயே செயல்பட்டிருக்கின்றன.

அரசின் வெளியுறவு கொள்கையும் பொருளாதார நிர்வாகமும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. வெளிநாடுகளின் நிதியுதவி அல்லது கடனுதவி ஆகியவற்றை அதிகம் நம்பியே பாகிஸ்தானின் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. நிரந்தரமான வளர்ச்சித் திட்டத்த்தை மேற்கொள்ள வேண்டும் பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு காண வேண்டும் என்ற எண்ணமே ஆட்சியாளர்களுக்கு இல்லை.

இப்போதும் கூட நிலைமையைச் சமாளிக்க வெளிநாடுகளிடம் உதவி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டப்படுகிறதே தவிர, உள்நாட்டிலேயே இதைப் பெற வழி உண்டா என்று ஆராயப்படுவதில்லை. இது எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் சர்வதேச நிதி அமைப்போ நட்பு நாடோ கடன் தர முன்வந்தாலும் நன்கொடை அளித்தாலும் அதை அரசு அதிகாரிகள் விருந்து வைத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர். சில ஊடகங்களும் இது பாகிஸ்தானின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே பூரிக்கின்றன.

இன்னொருவர் தரும் பணத்தில் வாழ்வது தேசிய சாதனை இல்லை என்று யாருக்கும் உறைப்பது இல்லை நெருக்கடியைத் தீர்க்க எங்கிருந்தோ பணம் வந்துவிட்டது இனி கவலையில்லை என்று ஆளும் வர்க்கத்துக்கு தவறான நிம்மதியை இந்த உதவிகள் அளித்துவிடுகின்றன. இதனால் பொருளாதாரப் பிரச்சனைகள் மீது அக்கறை செலுத்தி அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு தோன்றுவது இல்லை.

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு ஆரம்ப புள்ளியாக இருப்பது அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து வருவதுதான். தன்னுடைய வருவாய் ஆதார வரம்புக்கும் அப்பால் கடன் வாங்கித்தான் வாழ்கிறது அரசு. உள்நாட்டில் நிதியாதாரத்தைத் திரட்ட விரும்புவதில்லை. கட்டுக்கடங்காத செலவையும் குறைத்துக் கொள்ள முற்படுவதில்லை.
இந்த நிதிப் பற்றாக்குறைதான் நாட்டில் ஆண்டுக்கணக்காக தொடர்ந்து நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைக்கும், அதிக அளவ பணவீக்கத்துக்கும் பட்ஜெட் பற்றாக்குறைக்கும் வெளிவர்த்தகப் பற்றாக்குறைக்கும் காரணம். பொருளாதாரக் கோள்கைகளை மனம்போன வகையில் கடைப்பிடிப்பதால் இவை உண்டாகின்றன. வெளிநாடுகளுடன் பாகிஸ்தான் அரசு வைத்துக்கொள்ளும் உறவுகள் காரணமாகவே பொருளாதார நிர்வாகத்தில் அக்கறையின்மையும் தொடர்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்தது. அமெரிக்காவுக்கு நெருக்கமாக நாடாக இருந்ததால் அரசின் வருவாய்க் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து உதவியது அமெரிக்கா. எனவே அடுத்தடுத்து பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்த படித்த நகர்ப்புற மேட்டுக்கடிகளும் கிராமப்புற மேட்டுக்குடிகளும் பொருளாதார சீர்திருத்தங்களைத் தவிர்த்துவிட்டன. எனவே வரி வாருவாயும் அதிகரிக்கவில்லை. வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் பெருகவில்லை. இதன் விளைவாகவே உள்நாட்டில் நிதியாதாரம் திரளவில்லை.

அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு என்றாலும் நுகர்வுக்கு என்றாலும் வெளிநாட்டு நிதியுதவியை வைத்து ஈடுகட்டுவதே நடைமுறையாகிவிட்டது. அரசின் வெளியுறவுக் கொள்கை-அணி சேர்க்க காரணமாக இது அப்படியே பல்லாண்டுகளுக்குத் தொடர்ந்தது.

அமெரிக்காவுடன் வெறும் நட்புறவாக இருந்தது பிற்காலத்தல் ராணுவ உடன்படிக்கைளால் கூட்டாகவே வலுப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ரஷ்யாவை வெளியேறச் செய்யவும் சோவியத் ஒன்றியம் மேற்கொண்டு முன்னேறாமல் தடுக்கவும் பாகிஸ்தானைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது அமெரிக்கா. இதற்காக கேட்கும்போதெல்லாம் கடன் கொடுத்தது.

நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு தாலிபான்களை ஒழிக்க பாகிஸ்தானின் நட்பு அமெரிக்காவுக்கு மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது. எனவே பாகிஸ்தானின் நிதிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தானே நேரடியாக கடன் தருவதுடன் பன்னாட்டு செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) போன்ற அமைப்புகள் மூலமும் கடனுதவியை அதிகப்படுத்தியது. அது மட்டுமின்றி கடன் சுமை அதிகரித்தபோது பழைய கடன் மீது புதிய கடனைத் தந்து உதவியது.

இந்தக் காரணங்களால் ஜெனரல் ஜியாஉல் ஹக் காலத்திலும் பர்வேஸ் முஷாரஃப் காலத்திலும் வெளிநாட்டு நிதியுதவியிலேயே பாகிஸ்தான் நிர்வாகம் நடந்தது. பொருளாதாரத்தில் பாகிஸ்தான் வளர்ந்துவிட்ட மாயையும் அது ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியது.

இப்படி வெளிநாட்டு உதவி மிதமிஞ்சி கிடைத்த காலத்தில் அதையே சீர்திருத்தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குள் உற்பத்தி மற்றும் வரி விதிப்புகளை அதிகப்படுத்தி செலவுகளைக் கட்டுப்படுத்தியிருந்தால், சொந்தக் காலில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியிருக்கலாம். வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம். நாட்டின் பொருளாதார நிலை குறித்து தீவிரமாக ஆராய்ந்து சாதகங்களை வலுப்படுத்தியிருக்கலாம். பாதங்களை குறைத்திருக்கலாம். ஏற்றுமதியை பல துறைகளுக்கும் விரிவுபடுத்தி மக்கள் இடையே சேமிப்பை ஊக்கப்படுத்தி உள்நாட்டிலேயே முதலீட்டுக்கான நிதியைப் பெற்று மக்கள் தொகை வளர்ச்சி வேகத்தைவிட பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கச் செய்திருக்கலாம். இவற்றில் எதுவுமே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
பொருளாதார அடித்தளக் கட்டமைப்புகள் குறித்து கவலையே படாமல் தவறான வகையில் நிர்வாகத்தை தொடர்ந்தனர். இப்படிக் கடன் வாங்கி பெற்ற வளர்ச்சி அப்படியே நீடிப்பதற்கு பதில் இப்போது மிகப்பெரிய கடன் சுமையாக கழுத்தை நெறிக்கிறது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசு வாங்கிய கடன் இப்போது தாங்க முடியாத அளவு பெரும் சுமையாக அழுத்துகிறது. இந்தச் சுமைதான் இப்போது பொருளாதாரத்தை முடக்குகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருந்த பாகிஸ்தான் கடனுதவிக்காக சீனா சவூதி அரேபியா வளைகுடா நாடுகளை இப்போது அதிகம் நாடி வருகிறது. அந்த நாடுகளும் நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அன்றாடச் செலவுக்கே நிதி போதாத நெருக்கடியிலிருந்தும் மீட்க தொடர்ந்து உதவுகின்றன. பழைய கடன் பத்திரங்களை உரிய காலத்தில் பணம் தந்து மீட்க முடியாதபோது, அதையே புதிய கடனாக மாற்றிக் கொள்ள இந்த நாடுகள் உதவுகின்றன. ஐக்கிய அரபு சிற்றரசும் சவூதி அரேபியாவும் சில நாட்களுக்கு முன் செய்த அறிவிப்பகள் இந்த வகையிலானவை. கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு வந்த பிறகும் கூட வெளியிலிருந்து கடன் வாங்கிச் சமாளிப்பதையே அரசு சிந்திப்பதை இவை காட்டுகின்றன.
நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ இப்படிக் கடன் வாங்கியே சமாளிப்பதை மானப் பிரச்சினையாகவே கருதுவதில்லை. இது பொருளாதார நிர்வாகத்தில் நாடு தொடர்ந்து அடைந்துவரும் தோல்வியைத்தான் காட்டுகிறது.

கட்டுரையாளர்: கா.மு.அருள்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *