இஸ்லாம் ஒரு நாடு கடந்து வந்த நதி” என்றார் வார்த்தை சித்தர் வலம்புரிஜான், அந்த நதி இந்தியாவிற்கு வந்தது முதல் இன்றுவரை வரலாற்றின் பக்கங்களில் மதநல்லிணக்க உறவுகளை தந்து சகோதர சமுதாயத்திற்கு உரிமைக் காவலனாய் நிற்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாம் அல்லாத மக்களிடம் எவ்வித அடக்குமுறையும் கையாளவில்லை என்பதற்கு நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கோவில்களே சாட்சி.

இது மட்டுமல்ல இந்து சமயங்களை போற்றும் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாமியருக்கு எதிரான எவ்வித செய்யுளோ, பாடல்களோ இல்லை. அடக்குமுறைக்கு ஆளாகிய சமுதாயத்தின் மேல் இஸ்லாம் காட்டிய நேசம் அளப்பரியது. அரசியல் வாக்களித்தலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும், வரலாற்றுத் திரிபுகளாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கலாம், அடுத்து குதிப்பினார், தாஜ் மஹால், மதுரா மசூதி என்று அதிகார வர்க்கத்தின் விஷமப் பார்வையில் இருக்கலாம், ஆனால் பின்வரும் தகவல்கள் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அழிக்கவே முடியாது. ஏனெனில் இஸ்லாம் இருக்கும் வரை என்றும் பக்கபலமாக இருப்பவர்கள் சகோதர சமுதாய மக்கள் தான்.
மயிலாப்பூர் கோவில் குளமும் ஸ்ரீரங்கம் கோயில் நிலமும் ஆற்காடு நவாப் மனமுவந்து கொடையாக தந்தது.

துக்ளக் மன்னர்கள் காலத்தில் தங்கள் ஆட்சியின் கீழ் உள்ள கோயில்களை பாதுகாத்தது மட்டுமல்லாமல் புதிய கோவில்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
லோடி மன்னர்களுக்கு அவருடைய இஸ்லாமிய ஆலோசகர்கள் கோவில்களை இடிப்பது கூடாது என அறிவுறுத்தினர். அதனை எல்லா மன்னர்களும் பின்பற்றினர்.
முகலாயர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. அதற்கு மன்னர்கள் அனுமதி அளித்தது மட்டுமல்லாமல் உதவியும் செய்தனர்.

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் கட்டுவதற்கான நிலம் முகலாய மன்னர் அக்பரால் நான்காம் சீக்கிய குருவான ராம்தாஸ் கொடுக்கப்பட்டது.
1590-1735- ம் ஆண்டுக்களுக்கிடையே பூரி ஜெகநாதர் கோவிலில் விழா நடக்கும் பொழுதெல்லாம் முகலாய மன்னர்கள் பாதுகாப்பு அளிப்பது தமது கடமையாகக் கொண்டிருந்தனர்.
டெல்லி இஸ்லாமிய பேரரசு வெளியிட்ட நாணயங்களில் லட்சுமி, சீதை, ராமர் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.

பிற மதங்களை வெறுப்பவர் என்று தவறாக குற்றம் சாட்டப்படும் ஒளரங்கசீப் (ரஹ்) அவர்கள் ஜாதம்புலி ஷிவ் சங்கர் மந்திர், உஜ்ஜைன் மகா காலேஸ்வரர் கோயில், லதரஞ்சே ஜெயின் கோவில், கவுகாத்தி அம்பாரநாத் கோயில், காசி ஆலயம் அவற்றிற்கு மானியங்களை வழங்கி இருக்கிறார்.

திப்பு சுல்தான் தமிழ் ஆட்சிகாலத்தில் 153 கோவில்களை பராமரித்து வந்தார். சிருங்கேரி மடத்தை மராட்டிய ஹிந்து மன்னன் தாக்கியபோது மடம் திப்பு சுல்தான் உதவியை நாடியது.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு திப்பு சுல்தான் வழங்கிய 9.5 அங்குல உயரமுள்ள பச்சை மரகத லிங்கம் பாதுஷா லிங்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
அமர்நாத் பனிலிங்கம் இருப்பதை முதன்முதலாக கண்டுபிடித்து வெளி உலகத்திற்கு கூறியவர் பூட்டா மாலிக் எனும் இஸ்லாமியர் தான்.

சிதம்பரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற வைணவ தலத்தில் ராமர் பல ஊர்களுக்கு சென்று தில்லையில் கடலாடி வரும் உற்சவத்தை நடத்துவோர் முஸ்லிம்கள்.
ராமேஸ்வரம் கோவிலின் தெப்பத்திருவிழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் தங்களின் படகுகளை கொடுத்து உதவுகிறார்கள் இந்த படகு வழங்கல் முறை நெடுங்காலமாக நடந்து வருகிறது.

குற்றால நாதருக்கும் நெல்லை காந்திமதி அம்மனுக்கும் திருவிழா கொண்டாட 18ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் நிதி வசூலித்து தந்துள்ளார்கள்.
அந்தக் காலத்தில் ராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவில் சில கண்டன குரல்கள் எழுப்பினர் “அருட்பாவா? மருட்பா வா?” என்ற விவாதம் தொடர்ந்தது தன் வாதத் திறமையால் அருட்பா அணிக்கு வெற்றி தேடித் தந்தவர் செய்குத் தம்பி பாவலர்.
கிதார் இசை மேதை ரவிசங்கரின் குரு அலாவுதீன் கான்.

ஷெனாய் இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான் காசி விஸ்வநாதர் கோவிலில் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். நாட்டுப் பிரிவினைக்கு பிறகும் இசைப்பதை விட வில்லை.
சாரோட் இசைக் கலைஞரான உஸ்தாத் அம்ஜத் அலிகான் தான் உருவாக்கிய அதற்கு “ராக் சபரிமாலா” என பெயர் சூட்டினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலையில் பிரச்சனைக்குரிய அயோத்தி பகுதிக்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் “கோளா காட்” என்ற இடத்தில் ராமர் கோயில் இருக்கிறது.
டிசம்பர் 6, 1992 சம்பவம் முடிந்து நான்கு மாதங்களில் அதாவது 1993 ஏப்ரல் மாதத்தில் அந்த கோவிலில் ராமநவமி விழா, விவகாரம் சூடாக இருப்பதால் ராமநவமி விழாவை நடத்த வேண்டாம் என்று அங்கு உள்ள ஹிந்துக்கள் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அந்த வருடம் ராமநவமி நடத்த வைத்தவர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெருமக்கள். அவர்கள் தான் மாவட்ட ஆட்சியரிடம் போய் அனுமதி வாங்கி வந்தார்கள்.

மாலிக் கபூரின் தமிழக படையெடுப்பின்போது அவரை எதிர்த்த வீரபாண்டிய மன்னரின் படையில் இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 20,000.

தென்னிந்திய கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படைக்கு தலைமை தாங்கி நடத்தி சென்றவர் ஒருவர்தான் சேக் உசைன் (இச்சப் பட்டி அமில்தார் சேக் உசேன்).

கொண்ட பள்ளியில் செய்யப்படும் தசரா பொம்மைகள் அனைத்து வீட்டு கொலுக்களிலும் இடம் பெறுகின்றன. இந்த பொம்மைகள் பொனுக்கி என்னும் மரத்திலிருந்து முழுவதும் கை வேலைப்பாடாகவே இந்த பொம்மைகள் செய்யப்படுகின்றன. 17ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் இருந்து கொண்டபள்ளிக்கு இடம்பெயர்ந்த இஸ்லாமிய கலைஞர்கள் இந்த கலையை அறிமுகம் செய்தனர்.

தமிழகத்தில் இஸ்லாம் வேறு பிடித்த நாள் முதல் இன்று வரை சகோதர சமுதாய மக்களும் இஸ்லாமிய சமுதாயமும் பல்வேறு காலகட்டங்களில் இணைந்து சமூக நீரோட்டத்தில் பயணிப்பது மற்ற மாநில மக்களுக்கு முன்மாதிரியாகும். இன்னும் சொல்லப்போனால் கோவை அருகே வடசித்தூர் என்னும் ஊரில் மயிலான் தீபாவளி பண்டிகைக்கு முஸ்லிம்களை விருந்தாளியாக அழைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. மேலும் மதுரை, அரவக்குறிச்சி, இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் உறவு முறையை வைத்து அழைத்துக் கொள்வது இன்றும் இயல்பாகவே உள்ளது.

இந்து- முஸ்லிம் ஒற்றுமை என்பது இஸ்லாமிய பெரியார்களின் அடக்கஸ்தல நிகழ்வோடு நின்று விடுவதில்லை, அண்டை வீட்டாரின் உணவு பரிமாற்றத்துடன் நபிகளார் காட்டித் தந்த அன்பும் பரிமாறப்படுவது தான்.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *